Thursday 19 November 2015

புதைந்திருக்கும் இரகசியம்


அகோரப்பசியின் வேட்கையோடு அலசிய பின்னும்

அகப்படவில்லை அந்த நூறு ரூபாய்.

 

எப்பொழுதோ தொலைந்தவைகளோடு மறந்தவைகளும்

உயிர்த்தெழுந்ததில் தொற்றியது பதற்றம்.

 

இயல்பற்ற என் தேடல் கண்டு

நான் தருகிறேன் எனக் கரிசனம் காட்டுகிறார் அப்பா

 

எங்காவது தவறியிருக்கும்

போகட்டும் விடு எனச் சமாதானம் சொல்கிறாள் அம்மா

 

ஒத்த நூறு ரூபாய்க்கு இத்தனை அக்கப்போரா? என

பகடி செய்கிறாள் உடன் பிறந்தவள்

 

இயல்பாய் கதைக்கும் இவர்களிடம்

எப்படிச் சொல்லிப் புரிய வைப்பேன்?

 

தொலைந்த அந்த நூறின் சாயத்திற்குள்

நூறாயிரம் உணர்வலையாய்

உன் முத்தங்கள் புதைந்திருக்கும் இரகசியத்தை!