Sunday 3 August 2014

என்னைக் கொண்டாடி திரிவதில் மகிழ்பவன்

1990 களில் தொடங்கி தொடரும் நட்புக்கு சொந்தக்காரன். என்னுடைய எல்லா சந்தோசங்களிலும் சேர்ந்து இருந்ததைப் போல நெருக்கடிகளிலும் என்னுடன் இருந்தவன். ஒரே கல்லூரியில், ஒரே பிரிவில் படிக்க வேண்டும் என்பதற்காக வெளியூரில் நல்ல கல்லூரியில் கிடைத்த வாய்ப்பை விட்டு விட்டு என்னோடு அரசு கல்லூரிக்கு வந்தவன்

என்னுடைய ஒவ்வொரு முயற்சியிலும் தோள் தருபவன். சாத்தியமாகத விசயங்களில் எனக்காக துணிந்து செயல்பட்டு சாத்தியமாக்கி கொடுப்பவன். எது ஒன்றின் உதவி தேவை என்றாலும் இவனை தான் தயங்காமல் அழைப்பேன். தவறியும் மறுக்காமல் செய்து கொடுப்பவன். நான் சொன்னால் அதை மறுத்து எதையும் செய்ய மாட்டான் என்று தன் நண்பர்கள் வட்டத்தில் எனக்கான இறுப்பை இன்றும் உறுதி செய்து வருபவன்.

எனக்கென இருக்கும் நண்பர்கள் அனைவருமே இவன் வழி வந்தவர்கள் தான். என்னை எப்போதும் கொண்டாடி திரிவதில் பெரு மகிழ்வு கொள்பவன். என்னை பற்றி ஏதும் தெரிய வேண்டுமானால் காமாவிடம் கேளுங்கள் என மற்றவர்கள் சொல்லும் அளவுக்கு என் மீது அக்கறை கலந்த அன்புடையவன். நெருக்கடிகளை கடந்து போகும் வித்தையை, சமாளிக்கும் சாதுரியத்தை இன்று வரையிலும் கற்றுத் தருபவன். எங்களின் நட்பு ஈரம் மாறா தன்மையோடு காற்றுக்கென்ன வேலியாய் வானைப் போல நீண்டு கிடக்கிறது