Saturday 23 August 2014

புதியன கற்றல் நிகழும் விதம்!

மகனிடம் அவனின் மிஸ்இந்த புத்தகத்தை மாடிக்கு போய் சிக்ஸ்த் கிளாஸ் மிஸ்ஸிடம் கொடுத்து விட்டு வா என்று சொல்லி இருக்கிறார்கள். மாடிக்கு போனவனுக்கு சிக்ஸ்த் கிளாஸ் எங்கிருக்கு? என தெரியவில்லை. கதவில் பார்த்தால் 6 என எந்த எண்ணும் எழுதவில்லை. யோசித்தவன் நேராக மூன்றாவது படிக்கும் தன் அக்காவின் வகுப்புக்குச் சென்றிருக்கிறான்.

தம்பியை பார்த்ததும் வகுப்பு ஆசிரியையிடம் அனுமதி கேட்டு வெளியில் வந்தவளிடம் விபரம் கூறி இருக்கிறான். அவள் அவனை அழைத்துக்கொண்டு போய் “VI” என குறிக்கப்பட்டிருந்த வகுப்பைக் காட்டி இது தான் சிக்ஸ்த் கிளாஸ் என சொல்லி இருக்கிறாள். கூடவே அடுத்தடுத்த வகுப்புகளுக்கு அழைத்து போய் ”V”  க்கு பக்கத்தில் இரண்டு கோடு போட்டிருந்தால் அதுசெவன்த் என்றும். மூன்று கோடு போட்டிருந்தால் அதுஎயித் என்றும் சொல்லி கொடுத்து விட்டு அவனை அனுப்பி வைத்து விட்டாள்

பள்ளியிலிருந்து திரும்பியவன் "V" ன்னு போட்டு அதுக்கு பக்கத்தில் "I" ன்னு போட்டு எழுதினா அது நம்பராம்மா? என அவன் அம்மாவிடம் கேட்க அவள் ரோமன் லட்டர்ஸ் பத்தி சொல்லிக் கொடுத்திருக்கிறாள்இப்பொழுது வரிசை இலக்கங்களை தனியாகக் காட்ட ரோமன் லட்டர்ஸை பயன் படுத்த தொடங்கி இருக்கிறான்.

பெரியவர்கள் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லி முடித்து விடுவார்கள். சமயங்களில் அந்த பதிலைக் கூட முறையாகச் சொல்வதில்லை. ஆனால், குழந்தைகள் ஒரு கேள்விக்கு சொல்லும் பதில் வழி அடுத்தடுத்த திறப்புகளையும் செய்கிறார்கள். அதனாலயே புதியன கற்றல் என்பது அவர்களுக்குள் இயல்பாகவே நிகழ்கிறது.