Tuesday 12 August 2014

அற்புதங்களை நிகழ்த்துங்கள்

மாற்ற முடியாத விசயங்களுக்காக மனதை அலட்டிக் கொண்டு தன்னைத்தானே வருத்திக் கொள்பவர்களுக்கு இன்று பஞ்சமே இல்லை. தோல் நிறத்தில் தொடங்கி அவர்கள் அடுக்கும் பட்டியலை வைத்து ஒரு புத்தகமே போடலாம். அப்படியான பட்டியல்கள் மூலம் தங்களுக்கு தாங்களே போட்டுக் கொள்ளும் சட்டங்களை உடைத்துக் கொண்டு வெளிவராத வரை அத்தகைய மனநிலை கொண்டவர்களுக்கு வெற்றி எட்டா உயரத்தில் தான் இருக்கும்.

மாற்ற முடியாத விசயங்களை அப்படியே ஏற்றுக் கொள்வது, மாற்றுவதற்கான சாத்தியங்களை ஆராய்ந்து  செயல்படுவது என்ற இரண்டு வகைகளில் எடுத்துக் கொள்வதன் மூலம் அதை மகிழ்ச்சிக்கான அம்சங்களாக மாற்றி விட முடியும். அப்படி மாற்றிக் கொண்டவர்கள் மட்டுமே முன்னேறி இருக்கிறார்கள். வாழ்க்கையை வசப்படுத்தி இருக்கிறார்கள்.

வெள்ளம், புயல், அடர்பனி என மாற்ற முடியாத விசயங்களுக்காக நீங்கள் வருத்தப்படுவதால் என்ன நிகழும்உங்களுக்கு மன உளைச்சல் தான் ஏற்படும். இதுதான் என்றில்லை. உங்களுடைய ஆற்றல், திறனுக்குள் உட்பட்டு எவற்றையெல்லாம் மாற்ற முடியாது என உணர்கிறீர்களோ அதை அப்படியே ஏற்றுக் கொள்ள பழகுங்கள். அணைக்கட்டு நிரம்பி வெள்ளம் வரப்போகிறது என அறிவிக்கப்பட்டால் அணையில் இருந்து வரும் வெள்ள நீரை தடுக்கப் போகிறேன் என கிளம்பினால் அது முட்டாள் தனமில்லையா? இந்த முட்டாள் தனமான செயல் நீங்கள் உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் என முடிவெடுக்கும் போது புத்திசாலித்தனமான செயலாக மாறிவிடுகிறதுஎந்த ஒரு செயலுக்குமே இது போன்ற இரண்டு முடிவுகளில் தான் தீர்வுகள் இருக்கும். இதில் முட்டாள்தனமான தீர்வை எடுப்பவர்களைக் கூட அறிவுரைகளும், விளக்கங்களும் சொல்லி புத்திசாலித்தனமான தீர்விற்கு நகர்த்தி வந்து விடலாம். ஆனால், இவ்விரண்டிலும் அகப்படாத சிலர் இருக்கிறார்கள். அவர்கள், “இந்த மாதம் பருவமழைக்கான மாதம் இல்லையே. பின் எப்படி அழிவை தரும் வெள்ளம் வருமளவுக்கு மழை வந்தது. ஒருவேளை கலிகாலம் தொடங்கிடுச்சோ?” என்று சம்பந்தமேயில்லாத விசயங்களுக்குள் நுழைந்து கொண்டு தங்களை குழப்பிக் கொள்வார்கள்.

இந்தமாதிரியான பயம் அல்லது மனசலனத்தின் வழி வரும் சந்தேகங்கள் உங்கன் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முடக்கி போட்டு விடும். ஒருவித வெறுமையை உணர்த்த ஆரம்பித்து விடும். இந்திய குடியரசுத்தலைவராக இருந்த டாக்டர். இராதா கிருஷ்ணன் முதன் முறையாக அமெரிக்காவிற்கு சென்ற போது வாசிங்டனில் தட்பவெப்ப நிலை மோசமாக இருந்தது. காற்று, இருள் இவற்றோடு பலத்த மழையும் பெய்ய ஆரம்பித்திருந்தது.

விமானத்தை விட்டு இறங்கிய இராதா கிருஷ்ணனை வரவேற்ற அமெரிக்க அதிபராக இருந்த ஜான் எஃப் கென்னடி தங்களுடைய பயணத்தின் போது இங்கே இவ்வளவு மோசமான தட்பவெப்ப நிலை இருப்பதற்காக வருந்துகிறேன் என்று கூறினார். அதற்கு இராதா கிருஷ்ணன்மிஸ்டர் கென்னடி……….நம்மால் மோசமானவற்றை மாற்ற முடியாது. ஆனால், அது பற்றிய நம் மனக் கண்ணோட்டத்தை மாற்றிக் கொள்ள முடியும்என்றார். இந்த மனநிலைக்கு வந்து விட்டால் உங்களாலும் எதையும் எதிர்கொள்ளவும், இயல்பாய் ஏற்றுக் கொள்ளவும் முடியும். அதனால் வாழ்க்கை மீது விதிக்கப்பட்டிருக்கும் சில எதார்த்தங்களை ஒப்புக் கொள்ள மறுக்காதீர்கள். அதனால் தான் நம் முன்னோர்கள் அப்படியான எதார்த்த நிகழ்வுகளைவிதிஎன்று வகைப்படுத்தினார்கள். அதை மாற்ற முடியாது என்பதாலயேவிதியை மாற்ற முடியும்என சொல்லாமல்விதியை மதியால் வெல்லலாம்என சொல்லி தந்தனர். ஆனால் நாமோ நமக்கு சாதகமாக இருக்கிறது என்பதற்காக விதிவிலக்காக எடுத்துக் கொள்ள வேண்டியவைகளை எல்லாம் எடுத்துக்காட்டுகளாக எடுத்துக் கொண்டு விட்டோம்.

இஸ்லாமிய கலிபாக்களில் ஒருவரான ஹஜ்ரத் அலியை சந்தித்த யூத இளைஞன் விதிக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள வித்தியாசத்தை எனக்கு சொல்ல முடியுமா? என்று கேட்டான். ஹஜ்ரத் அலி அவனிடம், “உன் வலதுகாலை தூக்குஎன்றார். அவனும் தனது வலது காலை தூக்கியபடி நின்றான்.

சரி…..இப்போது உன் வலது காலைக் கீழிறக்காமலேயே இடது காலையும் தூக்குஎன்றார்.

அது எப்படி முடியும்?” என்றான் யூத இளைஞன்.

ஒற்றைக் காலை மட்டும் தூக்கு என்றதும் உன்னால் முடியும் என நினைத்து செய்தாய் அல்லவா? அது தான் பகுத்தறிவு. இன்னொரு காலையும் தூக்கச் சொன்ன போது அது முடியாது என உணர்ந்தாய் அல்லவா? அதுதான் விதிஎன்றார். அந்த யூத இளைஞனைப் போல பகுத்தறிவுக்கும், விதிக்குமான வித்தியாசத்தை உணர்ந்தாலே போதும். சாத்தியங்களை ஆராய்ந்து செயல்படுவதன் வழி மாற்றங்களையும், மாற்றங்களின் வழி மகிழ்ச்சியையும் உங்களால் உருவாக்கிக் கொள்ளமுடியும்.

நான் இன்சூரன்ஸ் நிறுவனம் ஒன்றில் விற்பனை முகவராக பணியாற்றிய போது நிகழ்ந்த சம்பவம். இன்சூரன்ஸ் பாலிசி வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர் நான் சொல்லப் போகும் இந்த நிகழ்வை எதிர் கொண்டவர்களாக தான் இருப்பார்கள். தவணைகளில் பணம் கட்டுவது, பாலிசி காலம் முடிந்ததும் போனசோடு பணத்தை திரும்ப பெறுவது என்று அதுவரை இருந்து வந்த பாலிசி தாரர்களை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பங்குச்சந்தைகள் பக்கம் கூட்டி வர ஆரம்பித்தன. ஒருமுறை முதலீடு செய்யுங்கள். மூன்றே ஆண்டில் இரட்டிப்புக்கு நிகரான தொகையை பெறலாம் என்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களாலும், முகவர்களின் அரைகுறை விளக்கங்களினாலும் பலரும் பங்குச்சந்தை பாலிசிகளில் பணத்தை முதலீடு செய்தனர். இப்படியான கவர்ச்சி விளம்பரத்தால் கவரப்பட்ட எங்கள் பகுதியைச் சேர்ந்த ஒருவர் சில இலட்சங்கள் பெறுமானமுள்ள தன்னுடைய இடத்தை விற்று அவ்வளவுக்கும் பாலிசி வாங்கி பல இலட்சங்கள் பெற திட்டமிட்டார். தகவல் தெரிந்ததும் அவரை பணத்தோடு அலுவலகத்திற்கே அள்ளி வந்த ஒரு முகவர் பங்குச்சந்தை பாலிசிகளாக போட்டுக் கொடுத்தார். இரண்டு வருடம் போனதும் பங்குச்சந்தை படுக்க ஆரம்பித்து விட முதலீடு செய்த  சில இலட்சத்திலேயே சில இலட்சம் குறைய ஆரம்பித்தது தெரிந்ததும் பாலிசி வாங்கிய அந்த நபர் பதறி போய்விட்டார். நேரடியாக இன்சூரன்ஸ் அலுவலகத்திற்கு வந்து பெரும் களேபரத்தை ஏற்படுத்தினார். எல்லாத்துக்கு சரி என சொல்லித்தான் பாலிசி எடுக்க கையெழுத்து போட்டுக் கொடுத்திருக்கிறீர்கள் என்று சொல்லி அவர் வாயை அங்கிருந்த அலுவலர்கள் அடைத்து விட்டார்கள். இனி ஒன்றும் செய்ய முடியாது என அவருக்கு தெரிந்து விட்டது. ஆனால் அதை நினைத்துக் கொண்டு அவர் அப்படியே முடங்கிப் போய் விடவில்லை. உடனடியாக பாலிசியை முடித்து இருக்கின்ற சில இலட்சங்களை வாங்கி அப்போது எங்கள் பகுதியில் வளர்ந்து வரும் தொழிலாக இருந்த ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்தார். முதல்முறை முதலீட்டில் செய்த தவறால் உண்டான அனுபவத்தால் மிகவும் கவனமாகவே இம்முறை முதலீடு செய்தார்அடுத்த ஓராண்டில் அவர் போட்ட சில இலட்சங்கள் பல இலட்சங்களாக அவருக்கு திரும்பி வர ஆரம்பித்தது. தனிஅலுவலகம் வைத்து செயல்படும் அளவுக்கு இன்று அத்தொழிலில் கொடிகட்டி பறக்கிறார். தனக்கு ஏற்பட்ட சிக்கலான அந்த நிலையை விதி என நினைத்து அவர் முடங்கிப் போகவில்லை. அதை மாற்றுவதற்கான சாத்தியங்கள் இருப்பதை அறிந்து தன் மதியால் வென்றார். இழந்த மகிழ்ச்சியை அடுத்த வருடமே இரட்டிப்பாக அறுவடை செய்தார்.

இவரைப் போல முதலீடு செய்திருந்த மற்றவர்கள் சாத்தியங்களை ஆராயவில்லை. மாற்றுவழி முதலீடுகளின் மூலம் இழந்த பணத்தை மீட்பதற்கான சாத்தியங்கள் இருந்தும் அதை அவர்கள் செயல்படுத்தி பார்க்க முயலவில்லைமூன்று வருடம் கழித்து போட்ட பணம் வந்தால் கூட போதும் என காத்திருந்து போட்ட பணத்தையும் விட குறைவான பணத்தை மட்டுமே பெற்றனர். “எல்லாம் விதி. போகனும்னு இருந்திருக்கு. போயிருச்சுஎன புலம்பி திரிவதாலும், மாற்ற முடியாதவைகளுக்குரிய விதியை மாற்றக்கூடிய விசயங்களின் மீது சுமத்தி சமாதானம் சொல்லிக் கொள்வதாலும் எந்த பயனுமில்லை. சாத்தியங்கள் இருந்தும் அதை செயல்படுத்தி பார்க்க பயந்தவர்களால் ஒரு போதும் முன்னோக்கி நகர முடியாது.

வாயிலிருந்து லிங்கம் எடுப்பதும், திருநீறை காற்றில் வரவழைப்பதும், பார்வையாலயே பீடைகளை ஓட்டுவதும் தான் அற்புதங்கள் என நினைக்காதீர்கள்.  இவையெல்லாம் அற்பங்கள்! அந்த அற்பங்களை விட அற்புதமான அற்புதம் விதி விலக்கிற்கும், எடுத்துக்காட்டுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து விதியை மதியால் வெல்வதும், அதன் மூலம் உங்களைப் பார்த்து மற்றவர்களை ஆச்சர்யப்பட வைப்பதும் தான்! இந்த அற்புதத்தை உங்களின் ஒவ்வொரு செயலிலும், நடவடிக்கையிலும் நிகழ்த்துங்கள். வாழ்வு வசப்படும். மகிழ்ச்சி உங்களை தேடி வரும்.

நன்றிநிலாச்சாரல்