Wednesday 26 March 2014

அன்புள்ள மணிமொழிக்கு......


(வல்லமை இணைய இதழ் அன்புள்ள மணிமொழிக்கு என்ற தலைப்பில் நடத்திய கடிதப் போட்டிக்காக எழுதப்பட்ட கடிதம்)
  
அன்புள்ள மணிமொழிக்கு அப்பா எழுதுவது.

இங்கு நான், அம்மா, தம்பி மற்றும் வீட்டில் உள்ள அனைவரும் நலம். அங்கு உன் நலத்துடன் உன் தோழிகள், ஆசிரியர்களின் நலன்களையும் அறிய ஆவல். நிற்க:       

கடந்தவாரம் நீ விடுப்பில் வந்த போது உன்னுடன் இருக்க முடியாமல் போய்விட்டது செல்லம். கம்பெனி விசயமாக அவசரமாக சென்னை செல்ல வேண்டியதாகி விட்டது. நீ ரொம்ப கோபமும், வருத்தமும் பட்டதாய் அம்மா சொன்னாள். அப்பா வேலை தான் உனக்கு தெரியுமே? அடுத்த மாதத்திலிருந்து நீ எங்களோடு தானே இருக்கப்போகிறாய். இரண்டு நாட்களுக்கு முன் உன் தோழி கோபிகாவின் அப்பா வந்திருந்தார். கோபிகாவின் திருமண பத்திரிக்கையை கொண்டு வந்திருந்தார். அதை பார்த்ததும் உனக்கும் வயது இருபத்தி நான்காகிறது என்று சொல்லி அம்மாவும் உன் கல்யாண பேச்சை ஆரம்பித்து விட்டாள்

என்னோடு கம்பெனியில் வேலை பார்க்கும் பிரகாஷ் மாமா ஒரு வரன் சொல்லி உள்ளார். நமக்கும் தெரிந்தவர்கள் தானாம். கீழக்கரையில் தான் அவர்கள் குடும்பம் இருக்கிறதாம். பையன் புரபொசராக இருக்கிறாராம். பையனின் அப்பா வணிகவரி துறை அலுவலராக இருக்கிறார். அம்மா ஹவுஸ் ஒய்ப். உடன் பிறந்த அண்ணன்கள் இருவருக்கும் திருமணமாகி விட்டது. ஒரே ஒரு தங்கச்சி. பாலிடெக்னிக்கில் படித்துக் கொண்டிருக்கிறதாம். எல்லோரும் கூட்டுக் குடும்பமாக இருக்கிறார்களாம். உன்னை பிரவின் கல்யாணத்தில் வைத்து அவர்கள் பார்த்திருக்கிறார்களாம். படித்துக் கொண்டிருப்பதாய் சொன்னதால் படிப்பு முடியவும் கேட்கலாம் என நினைத்திருந்தார்களாம். இந்த வருடம் உனக்கு படிப்பு முடிந்து விடும் என்பதால் பிரகாஷ் மாமா மூலம் கேட்கச் சொல்லி இருக்கிறார்கள். உனக்கு ஏற்ற பையனாக இருப்பான் என பிரகாஷ் மாமாவும் சொல்கிறார். நம் வீட்டில் யாரும் இன்னும் பையனை பார்க்கவில்லை. பையனின் அப்பா மட்டும் ஒருநாள் கம்பெனியில் வந்து என்னை பார்த்தார்.  

உன்னிடமும், வீட்டிலும் கேட்டு சொல்வதாய் சொல்லி உள்ளேன். உன் சின்ன சித்தி சரண்யா நேற்று வீட்டிற்கு வந்திருந்தார்கள். வரன் வந்திருக்கும் விசயத்தை சொன்னதும் நீயும் கூட்டுக்குடும்பமா நிறைய பேர் இருக்கிற வீட்டிற்கு தான் மருமகளா போவேன்னு அவர்களிடம் முன்பு சொன்னதாய் சொன்னார்கள். உன் விருப்பம் என்ன? நானும் இதுவரை உன்னிடம் கல்யாணம் பற்றி பேசவில்லை. அவசரமில்லாமல் படிப்பு முடிந்ததும் உன் விருப்பத்திற்கேற்ப செய்யலாம் என நினைத்திருந்தேன். ஆனால் வரன் இவ்வளவு சீக்கிரம் வந்து விட்டது. நீ அடுத்த வாரம் வந்த பின் உன்னிடம் பேசிய பின்பே முடிவு செய்யலாம் என நானும், அம்மாவும் நினைத்துள்ளோம்.         

இந்த முறையும் நீயும், உன் தம்பியும் பேசிக்கொள்ளவில்லை என்று அம்மா வருத்தப்பட்டாள். அவன் தான் அப்படி செய்கிறான் என்றால் நீயும் அப்படி அவனோடு மல்லுக்கு நிற்கலாமா? நீங்கள் இருவரும் என்ன சிறு பிள்ளைகளா? அவ பிடிவாதம் தான் எனக்கு பயமாக இருக்கு. எல்லாத்துக்கும் நீங்க கொடுக்குற இடம் தான் காரணம் என அம்மா சொல்லிக் கொண்டே இருக்கிறாள். நேற்று சர்மிளா சித்தி வீட்டிற்கு வந்திருந்த போது இதை  அம்மா சொன்னதும் தம்பியை திட்டினார்களாம். அதனால் உடைத்த உன் கேமாராவுக்கு பதில் புதிதாக வாங்கி தருவதற்காக தம்பி தாத்தாவிடம் பணம் வாங்கி வைத்திருக்கிறானாம். என்னிடம் அவன் சொல்லவில்லை. உன் அப்பத்தா தான் சொன்னார்கள்.      

தவிர, சென்னையிலிருந்து வரும் போது உனக்காக எஸ்.இராமகிருஷ்ணன் தொகுத்த சிறந்த நூறு சிறுகதைகளின் தொகுப்பை வாங்கி வந்தேன். எனக்கும், உனக்குமாக கொஞ்சம் கவிதை, கதை புத்தகங்கள் வாங்கி வந்தேன். படிக்காம அப்பாவும், மகளுமா புத்தகத்தை வாங்கி, வாங்கி அடுக்கி வையுங்க. புக் ஃபேர்ல நான்காயிரம் ரூபாய்க்கு வாங்கிட்டு வந்த புத்தகமெல்லாம் இன்னும் தூங்குது. அதுக்குள்ள ஆயிரம் ரூபாய்க்கு புத்தகங்கள் எதுக்குன்னு அம்மா சண்டை போட்டாள். அப்பா புக்கு பைத்தியம். அம்மா புடவை பைத்தியம். அப்படின்னு சொல்லி தம்பி தான் சமாதானம் செய்து வைத்தான்.        

தம்பிக்கு இண்டர்வியூ ரிசல்ட் வந்து விட்டது. வேலைக்கு தேர்வாகி விட்டான். நாளை மறுநாள் பெங்களூருக்கு போகிறான். அங்கு அவனுக்கு வேண்டிய ஏற்பாடுகளை பிரபு சித்தப்பா செய்து கொடுப்பதாய் சொல்லி உள்ளார்கள். அடுத்தவாரம் வேலையில் சேர வேண்டுமாம். பெங்களூர் போகும் வழியில் உன்னை பார்த்து விட்டு போவதாகவும், சஸ்பென்ஸாக இருக்கட்டும் அதனால என்னிடம் கூட சொல்ல வேண்டாம் என அம்மாவிடம் சொல்லி இருக்கிறான். அநேகமாக உனக்கு புது கேமரா வாங்கி வருவான் என நினைக்கிறேன். வந்தால் அவனை வாழ்த்தி அனுப்பி வை. நீயும் ஏதாவது கிஃப்ட் வாங்கி அவனுக்கு கொடுத்து விடு.       

வைரஸ் காய்ச்சலில் இருந்த உன் தோழி காவியா எப்படி இருக்கிறாள்? கேட்டேன் என்று சொல். முடிந்தால் நீ வரும் போது அவளையும் வீட்டிற்கு அழைத்து வா. உன் அம்மாவும் சொல்லிக் கொண்டே இருக்கிறாள். கடந்தவாரம் நீ சொன்ன கவிதையைவிதையின் குணம்என்ற தலைப்பில் எழுதிவல்லமைஇணைய இதழுக்கு அனுப்பி வைத்துளேன். இந்த கடிதம் உனக்கு கிடைக்கும் போது கவிதை பிரசுரமாகி இருக்கும் என நினைக்கிறேன்.        

உடம்பை கவனமாக பார்த்துக் கொள். உன் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பி உள்ளேன். வரும் போது கல்லூரி, விடுதி கட்டணங்களை கட்டி ரசீது வாங்கி கொள். விடுதியை காலி செய்து விட்டு வரும் போது எல்லாவற்றையும் எடுதுக் கொண்டாயா? என சரி பார்த்து விட்டு கிளம்பு. உன் ஆசிரியர்களிடம், நண்பர்களிடமும் சொல்லி விட்டு வா. அங்கிருந்து கிளம்பும் போது போன் செய். இம்முறை தம்பி பெங்களூர் போய்விடுவான். அதனால் நானோ, அம்மாவோ தான் உன்னை பிக் அப் பண்ண வருவோம். உன் தோழிகளிடம் சொல்லி ஒவ்வொரு முறையும் அழைத்து பேசுவது சங்கடமாய் இருப்பதால் மூன்று நாட்களாக பேசவில்லை என அம்மா சொல்லிக் கொண்டிருந்தாள். உன் செல்போன் சரியாக வேலை செய்யா விட்டால் குறைந்த விலையில் ஒரு செல்போன் வாங்கி கொள். உனக்கு பிறந்த நாள் பரிசாக தர கார்த்தி சித்தப்பா ஸ்மார்ட்போன் வாங்கி வைத்திருக்கிறாராம். அடுத்த மாதம் மலேசியாவிலிருந்து வரும் தன் நண்பர் மூலம் கொடுத்தனுப்புவதாய் சொல்லி இருக்கிறார்கள்.         

தேர்வை கவனமாக எழுதவும். அட்வான்ஸ் வாழ்த்துக்கள். உன் வரவுக்காக காத்திருக்கிறோம்.

அன்புள்ள அப்பா......

மு.கோபி சரபோஜி

இராமநாதபுரம்

நன்றிவல்லமை