Wednesday 11 December 2013

பிரசவ அரங்கேற்றம்


எங்களை பகலவனாக்க
பராசக்தியிடம் சக்தி கேட்டவனே

உன் இறுதிச்சடங்கில்
உன்னை மொய்த்த ஈக்களை விட
வந்தவர்கள் குறைவாம்

வாசித்த போது வருத்தம் மட்டுமல்ல
கோபமும் கூடவே
எங்கள் முந்தைய தலைமுறை மீது

ஒரு தலைமுறை மீதே
கொண்ட கோபம் தான்
எங்களை முந்நிலும் எழுச்சி பெற செய்தது

நீஏற்றி வைக்க ஆசைப்பட்ட விளக்குகளில்
ஆர்வம் கொள்ள வைத்து
துலங்கி தூண்டச்செய்தது

உன் கனவுகளை நனவாக்கி
கைமாறு செய்ய
நாங்கள் கை கோர்த்தோம்

தனித்து கிடந்த நாங்கள்
தரணி ஆள புறப்பட்டோம்

வீட்டுக்குள் முடக்கி வைத்த
மூடப்பழக்கங்களை உடைத்து
விண்ணுக்கு சென்று வந்தோம்

சாதியின் சாயத்தை
எங்களின் காதலில்
கரைத்து எடுத்தோம்

ஆணுக்கு பெண்ணிங்கு இளைப்பில்லை
என காட்ட
ஆளுமைக்கு வந்தோம்

உன் கனவுகள்
அள்ள அள்ள குறையா அட்சய பாத்திரம்

அதில் சிந்தியதைமட்டும்
செயலாக்க எங்களுக்கு
ஒரு தலைமுறை போதவில்லை

ஆகவே தான்
உன் கனவுகளில்
எஞ்சியதை அர்த்தப்படுத்த
எங்களையே பிரசவித்துக் கொள்கிறோம்
அடுத்த தலைமுறையாய்!

நன்றி : மகாகவி